Monday, January 25, 2010

27. பொடியா

பொடியா பொடியா பொடிப் பொடியா
மனதில் நுழைந்தாய் பொடி நடையாய்..
கொடியா கொடியா செடி கொடியா
எனக்கே வளர்ந்தாய் நிழற் குடையாய்..

நொடியா நொடியா முதல் நொடியா
கண்டதும் பிடித்தது மறு நொடியா
வெடியாய் வெடியாய் சர வெடியாய்
கவிதைகள் தந்தாய் முரண் தொடையாய்..

படையாய் படையாய் போர்ப் படையாய்
போர்கள் செய்கிறாய் இது சரியா?
தடையா தடையா பெரும் தடையா
கேள்விக்கு சொல்வாய் ஒரு விடையாய்..

குறையா குறையா நிறம் குறையா
சொல்லித் தொலையேன் ஒரு வழியாய்..
முறையாய் முறையாய் வரை முறையாய்
ஒரு வார்த்தை சொல்லேன் மன நிறைவாய்..

விழியா விழியா அகல் விழியா
தெரிந்தேன் விழுந்தேன் கரு மணியாய்..
வழியா வழியா வழி வழியாய்
உன்னைத் தொடர்நதால் அது பிழையா..

மழையாய் மழையாய் தேன் மழையாய்
முழுவதும் நனைத்தாய் துளித் துளியாய்..
விளைவாய் விளைவாய் அதன் விளைவாய்
பூத்தேன் நானும் ஒரு மலராய்..

தரமாய் தரமாய் நிரந்தரமாய்
எனக்கே கிடைத்தாய் ஒரு வரமாய்..
இரவாய் இரவாய் நள்ளிரவாய்
பேசிட வந்தாய் பொன்னிலவாய்..

மறைவாய் மறைவாய் மன நிறைவாய்
நேசமே வந்தாய் நல்லுறவாய்
அலையாய் அலையாய் தொடர் அலையாய்
விழுந்தேன் மிதந்தேன் ஒரு இலையாய்..

கலையாய் கலையாய் ஒரு கலையாய்
ரசித்தாய் புசித்தாய் இது நிலையா?
நினைவாய் நினைவாய் உன் நினைவாய்
உயிரும் இயங்குது இது கனவா?

அழகாய் அழகாய் மனம் அழகாய்
இயற்கை படைத்தது உன்னை முழுதாய்
விழுதாய் விழுதாய் ஆல் விழுதாய்
என்னில் விழுந்தே எனை உழுதாய்.. 

No comments:

Post a Comment