Tuesday, September 14, 2010

75.மரணம் தருகிற விடுதலை


உலகில் உள்ள வலிகள் 
எல்லாம் மனதை தாக்குதே... 
உளிகள் கொத்திய கல்லாய் 
இதயம் மண்ணில் சாயுதே..

காதல் ஏந்திய  இந்தக் கைகளில் 
காயம் மாற்றி தந்ததேனடா.. 
புனிதம் என்று எதுவும் இல்லை..
மனிதம் கொண்டால் வலியும் இல்லை.. 

காரணம் சொல்லி காதலை அள்ளி 
எறியத் துணிந்ததேன்? 
மரணம் தருகிற விடுதலை எண்ணி 
பற்ற துடிக்கிறேன்.. 

ஒருநாள் உனக்கு புரியும் போதிலே 
ஆறுதல் சொல்ல என் பாடல் இருக்குமே
இப்போதெனக்குள் வழியும் துயரம் 
தாங்கிட இங்கு என் பாடலே உண்டு..   

உயிரை மாய்த்துக் கொண்டால் 
ஒருநாள் துயரமே.
உன்னை மாற்றி கொண்டால் 
என் வாழ்நாள் நீளுமே 


Monday, September 13, 2010

74.வெள்ளைப்பொய்


குழந்தைப் போல அழுகிறேனே
எந்தன் பேச்சை மீறயிலே.. 
குழந்தைப் போல சிரிக்கிறேனே
எந்தன் பேச்சைக் கேட்கையிலே


அடங்காமல் திரிந்தேனே
உன் காதல் என்னைத் தொட்டதும்..
மிதக்காமல் மிதந்தேனே
ஒரு வார்த்தை என்னைக் கேட்டதும்.. 


உலகம் யாவும் மாறுதே
உயிரில் மின்னல் ஓடுதே
என் கண்ணில் உன்னை ஊற்றிக் 
கொண்டு உறங்கச் சென்றேனே..


அன்பே என் ஆசையெல்லாம் 
உன்னோடு வாழத்தானே..
அது மட்டும் போதும் போதும் 
ஆயுளும் கூடும் கூடும்..


என்னைப் போல் உன்னை யாரும் 
நெஞ்சுக்குள் தைத்ததில்லை..
நீ மட்டும் அருகில் வந்தால்
நெஞ்சுக்குள் பூக்கள் பூக்கும்.. 


உன்னோடு நான் என்னோடு நீ
இரவுகள் தீரக் கூடுமோ?
கண்ணே உனை காணாமல் தவித்தேனே
பேச்சுக்களும் ஏச்சுக்களும்
எப்போதும் மாறக் கூடுமோ
என் ஜீவனே உன்னைப் பிரியாதே..


காலங்கள் ஓடுதே.. காயங்கள் கூடுதே
கடற்கரை மணலுந்தன் காலடியைத் தேடுதே.. 


அழகாகச் சிரித்துச் சென்றாய்
அடிநெஞ்சில் கீறிக் கொன்றாய்
ஏனென்று கேட்டால் மட்டும்
ஏதும் சொல்ல மறுக்கிறாய்
இரவெல்லாம் பேசிக் கொண்டாய்.. 
கனவெல்லாம் நீயாய் வந்தாய்..
காரணம் கேட்டு விட்டால்
காணாமலே போகிறாய்.. 


பேச விட்டு நீ சிரிப்பதும்
ஏசி விட்டு நான் முறைப்பதும்
பிடித்ததே பிடித்ததே உனக்கு
கொஞ்சி கொஞ்சி நான் குழைவதும்
நேசம் கொண்டு நான் அலைவதும்
பிடித்ததே பிடித்ததே உனக்கு
உன்னிலும் என்னிலும்
உள்ளுக்குள் உறங்கிடும்
காதலும் வெளி வரும் 
நாளை எதிர்பார்க்கிறேன்


நீ சொல்லும் வெள்ளைப்பொய்யால்
நம் நேசம் மாறாதன்பே 
நான் சொல்லும் வார்த்தையெல்லாம் 
பொய்யாகப் போகாதன்பே


எண்ணம் போல் வாழ்வென்று 
முன்னோர்கள் சொன்னதுண்டு
நீயே என் வாழ்வென்று 
காதல் வந்து சொன்னதின்று..

Sunday, September 12, 2010

73.உன்னோடு


மழையைப் போல வீழ்கிறேனே 
உந்தன் மூச்சு தீண்டிடவே..
அலையைப் போல வாழ்கிறேனே
உந்தன் பேச்சு இனித்திடவே..
யாரோடு யாரிங்கு 
சேர்ந்திடக் கூடுமோ
வேரோடு நீர் வந்தால் 
வேண்டாமென்று சொல்லுமோ

விண்ணேகினால் மண்மேவினால்
எங்கும் உந்தன் பிம்பம்
உண்ணாமலே உறங்காமலே
ஏங்கும் எந்தன் நாளும்
ஆமென்று சொல்லிட ஆண்டுகள் வாழுமே
தேமென்று நின்றிட தேகம் மண்ணில் வீழுமே..

உன்னோடுதான் என்னோடுதான் 
கண்ணாமூசி ஆடும்
காதோடுதான் கண்ணோடுதான்
ரகசியம் யாவும் பேசும். 
நில்லென்று சொல்லியும்
நிற்காமல் ஓடுதே 
தள்ளென்று கூறினால் 
தள்ளிவிட்டு தேடுதே.

Wednesday, August 25, 2010

72.நீ சரிதான் என்பாயா?




அன்பே உனைக் கனவில்
கண்டேனே உயிராக
அழகே உனை கண்ணில்
கொண்டேனே கரு மணியாக
அறிவே உனை கவிதை செய்தேனே
ஒரு சொல்லாலே
அடடா எனை மறந்தே போனேனே
உன் நினைவாலே

அளவோடு நீ பேசிய போதும் 
அடங்காமல் நான் ஏசிய போதும்
பூவாக நீ வீசியதாலே புதிதாய் பிறந்தேனே

ஒரு வார்த்தை சொன்னால் போதும் 
என் வாழ்க்கை தேனாய் மாறும்
குழந்தை போல் உன்னைத் தாங்கி 
இன்பம் தருவேனே

காயம் கொள்கிற போது உன் 
கண்கள் தீண்டிட வேண்டும்
காயம் என்பது மாயமாகுமே உன் 
கைகள் சேர்த்திட்டால் போதும்

இமயம் தொடுகிற போதும் உன்
மையம் தன்னிலே இருப்பேன்
உன்னை நீங்கி நான் என்ன செய்துதான்
ஆவதென்ன என்னெஞ்சே

உன்னோடு வாழ்கின்ற நொடிதோறும் ஆனந்தம்
நீயின்றி நடக்கின்ற அடிகூட பூகம்பம்
கண்ணே என் கண்ணே 
நீ என்னில் உறைவாயா? 

நேரில் பார்க்கிற போது என் 
கண்கள் மலருதே பாரு
இந்த நேரத்தில் இவரைச் சந்தியென
சொல்லிச் சென்றது யாரு? 
உன்னை மட்டுமே எண்ணி 
காதல் வளருதே என்னில் 
யாரென்ன தான் சொன்ன போதிலும் 
திரும்ப மறுக்கிறேன் அன்பே

பூவோடு சேர்கின்ற நாரிங்கு மணக்காதா? 
உன்னோடு வாழ்கின்ற காலம்தான் வாய்க்காதா?
கண்ணே என் கண்ணே 
என் கண்ணீர் துடைப்பாயா? 

காதல் என்பது வேறு 
நட்பு என்பது வேறு 
நட்பு காதலாய் மாறக் கூடுமே
காதல் மாறுமா நட்பாய்? 
காதல் நட்பிலே வாழும் நம்
காலம் முழுமையும் நிலைக்கும் 
நட்பில் காதல்தான் வாழக் கூடுமா? 
அது நம் வாழ்வில் தகுமா? 

அடிநெஞ்சில் சேமிக்கும் என் காதல் எல்லாமே 
நீ வந்து செலவாக்கும் வரம் வேண்டும் என் அன்பே
பொடியா நான் சொன்னால் 
நீ சரிதான் என்பாயா? 

Thursday, July 22, 2010

71.விழியே விளக்காகும்


கனவினில் கனவினில் நுழைந்து விட்டாய்
கவிதைகள் வாசித்து எழுப்பி விட்டாய்
விலகிட விலகிட அருகில் வந்தாய்
பழகிட பழகிட அழகைத் தந்தாய்

முதல் நாளில் உன் பார்வைக்குள்
ஒரு பதியம் செய்திட்டாய்
மறுநாளில் உன் வார்த்தைக்குள்
ஒரு வசியம் வைத்திட்டாய்

இரவினில் தினம் பேசுகிறாய்
இமைகளை நினறு வாசிக்கிறாய்
இதயத்தில் அனல் வீசுகிறாய்
இருந்துமே உண்மை மறைத்துக் கொன்றாய்

ஏனடா அட ஏனடா
உருகுதே என் உயிரடா
ஒரு வார்த்தை சொன்னால்
எந்தன் வாழ்வு இன்னும் நீளாதோ
மறு வார்த்தை பேசாமல் சென்றால்
என்னை மரணம் தீண்டாதோ

காலையில் நான் எழும் போது
ஒரு முத்தம் நீ தருவாயோ
மாலையில் வீடு திரும்புகையில்
மறைந்தே கட்டிக் கொள்வாயோ

ஆயிரம் என் ஆசைகள்
ஆயினும் சொல்ல மறுக்கிறேன்
உண்மை சொல்லாத போதும் எந்தன்
உயிரும் உனக்காகும்..
இருளும் சூழ்கின்ற போது உந்தன்
விழியே விளக்காகும்.

Saturday, July 17, 2010

70.ஐந்திணை


கைக்கிளையா? பெருந்திணையா?
இரண்டும் இல்லா ஐந்திணையே..
ஐந்திணையா அதில் எத்திணையோ?

கடலும் கடலைச் சார்ந்த இடமும்
நெய்தல் என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
கேள்விகள் கண்ணா..?
புரிந்தும் புரியா
நடிப்பெல்லாம் ஏனோ?
ஏனோ? ஏனோ?

முன் ஜென்மத்தில் ஒரு மீனவப்
பெண்ணாய் நானும் வந்து பிறந்திருந்தேன்
ஒரு அலை வந்து என்னைக் கடத்திட
படகில் நீதான் கரை சேர்த்தாய்
அன்றுடன் உன்னில் நான்
கலந்துவிட்டேன்
இரவெல்லாம் கனவினில்
திளைத்திருந்தேன்
ஒருநாள் மரணம் எனைத் தீண்டவே

பிரிந்து விட்டேன் பிரிந்து விட்டேன்
என்று நீயும் நினைத்திருந்தாய்
பிறந்து விட்டேன் பிறந்து விட்டேன்
நீயேன் நம்ப மறுக்கின்றாய்?

வயலும் வயலைச் சார்ந்த இடமும்
மருதம் என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
தனிமை அன்பே..
துணிந்து வந்தென்னை
கரம்பிடி இன்றே..
இன்றே இன்றே..

முன் ஜென்மத்தில் மருதத் தலைவனின்
மகளாய் நானும் பிறந்திருந்தேன்
ஒரு அறுவடை நிகழ்ந்த நாளொன்றில்
கருக்கருவால் பட்டு நான் துடித்தேன்
மனதில் உனைத் தாங்கி நான் சரிய
மடியில் என்னை நீயேந்திக் கொண்டாய்
இருந்தும் கண் மூடினேன்..

இறந்து விட்டேன் இறந்து விட்டேன்
என்று நீயும் நினைத்திருந்தாய்..
இணைந்திடவே பிறந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்.?

காடும் காட்டைச் சார்ந்த இடமும்
முல்லை என்று தெரியாதவனா?
தெரிந்தும் எதற்கிந்த
மௌனம் அழகே.?
மௌனம் விட்டு
மொழி சொல்லு அழகே..
அழகே அழகே..

முன் ஜென்மத்தில் இந்த காட்டினுள் ஒரு
முல்லைக் கொடியாய் பூத்திருந்தேன்..
ஒரு மரமென நீ அணைத்திட்டாய்
உன்மேல் நானும் படர்ந்திருந்தேன்..
விறகு வெட்டி உனை வெட்ட
என் உடலால் நானும் தடுத்து
சோர்ந்தே நான் சரிந்தேனே..

மரித்துவிட்டேன் மரித்துவிட்டேன்
என்றே நீயும் நினைத்திருந்தாய்
மலர்ந்து விட்டேன் மலர்ந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்?

மணலும் மணலைச் சார்ந்த இடமும்
பாலை என்று அறியாதவனா?
அறிந்தும் எதற்கிந்த
ஆணவம் பொடியா?
அழிந்து போகுமுன்
ஆதரி பொடியா..
பொடியா பொடியா..

முன் ஜென்மத்தில் பாலை வெளியினில்
தனியாய் வந்து மாட்டிக் கொண்டேன்
தண்ணீருக்கு நானேங்கியே
கண்கள் சொருகி விழுந்துவிட்டேன்..
வழியில் பார்த்தே நீ பதறிவிட்டாய்
கண்ணீர் கொண்டென்னை அணைத்துக் கொண்டாய்
இருந்தும் உயிர் நீங்கினேன்..

புதைந்து விட்டேன் புதைந்து விட்டேன்
என்றே நீயும் நினைத்திருந்தாய்
புலர்ந்து விட்டேன் புலர்ந்து விட்டேன்
அதையேன் நம்ப மறுக்கின்றாய்?

நிலமும் நிலத்தைச் சார்ந்த இடமும்
குறிஞ்சி என்று அறியாதவனா?
அறிந்தும் எதற்திந்த
தாமதம் நெஞ்சே..
புரிந்தும் ஏனிந்த
போர்க்களம் நெஞ்சே..
நெஞ்சே நெஞ்சே..

இந்த ஜென்மத்தில் உன்னை அடைந்திடும்
வரத்தை நானும் வாங்கி வந்தேன்..
என் தேடலில் நீ கிடைத்திட்டாய்
என் காயம் கவலை மறந்துவிட்டேன்..
இனிமேல் உனை நான் பிரிந்திருக்க
ஒருநொடி என்னால் முடியாதே..
காதலே நீ தீண்ட வா..

அடைந்து விட்டேன் அடைந்துவிட்டேன்
என் ஆசைகள் உன்னால் அடைந்துவிட்டேன்
கரைந்திருப்பேன் கரைந்திருப்பேன்
உன் காதலில் என்றும் கலந்திருப்பேன்

69.இயற்கை செய்கிற லீலை.


சொல்லாமல் தொக்கி நிற்கும் காதல்
கொல்லாமல் கொல்லுமது சாதல்
பொல்லாத வேதனையின் தஞ்சம்
சொல்லத்தான் ஏங்குகிற நெஞ்சம்

ஒரு போருக்கு நாம் செல்வதைப் போல்
இந்த காதலினை சொல்வதுதான்
இதில் வெற்றியும் தோல்வியும்
இயற்கை செய்கிற லீலை..

நட்பின் பயணம் காதலைத் தொடலாம்
இரண்டும் இணைந்திடலாம்
காதல் நதியினிலே காயம் கழுவிடலாம்

கண்களில் கசியும் காதலினை
நெஞ்சம் சிறிதும் அறியாதா?
புறக்கணித்தால் என்னாகும்?
என்றேதான் மனம் எண்ணி புதைகிறதே..

காதலின் முன்னே கடவுளும் என்ன?
வலிகள் வதைத்திடுமே
உள்ளம் சிதைந்திடுமே உயிரும் உறைந்திடுமே

பெண்ணின் மனது ஆழமென்று
பலபேர் இங்கு சொல்வதுண்டு
ஆண்மனதும் ஆழம் தான்
அறிந்திடத்தான் வழியிங்கு பிறந்திடுமா?..

Wednesday, July 14, 2010

68.மறவேன் உந்தன் காதலினை


உன்னோடு வாழ்ந்திடவே தான்
உயிரை இன்னும் வைத்திருக்கேன் நான்
மண்ணோடு போகும் போதும் 
மறவேன் உந்தன் காதலினை

கண்ணோடு மோதியதாலே
காதல் வலிதான் கொண்டேன் அன்பே
என்னோடு நீ வரும் போது 
எல்லா வலியும் பறந்திடுமே

தினந்தோறும் என் இரவை 
உன் வரவில் நிறைத்திருக்கும் 
வரம் கூட வேண்டாம் கண்ணே
சாபம் தந்திட வா

நூறு கோடி ஆண்கள் உண்டு
உன்னைப் போல் யாருமில்லை
உந்தன் அணுகுமுறையாலே
கொள்ளை போனேனே

வேறெதுவும் தேவை இல்லை
சிறுபார்வை போதுமடா
அதுவேதான் சம்மதமாய்
எண்ணி வாழுவேன்

யாராரோ கடந்தார் அன்பே
நீதானே கடத்தினாய் என்னை
யாராரோ உடலைப் பார்க்க
நீதானே உள்ளம் பார்த்தாய்

கற்பனைகள் ஏதுமின்றி
கனவுகளின் தூதுமின்றி 
சிறகடித்த என்னை நீ
கிறங்கடித்தாயே..

கவிதைகள் ஆயிரமாய்
காதலது பாயிரமாய்
படைத்திடவே செய்தாயே
படைப்பாளனே

ஒரு நாள் நான் பேசா விடினும்
உயிரிங்கே உறையுது அன்பே
உருகாத எந்தன் மனதும்
மருகித்தான் கிடக்குது உன்னில்

67.அன்பே என்னை நீங்காதிரு


அழகே ஆதரி
ஆகவே காதலி
அன்பே வேரடி
ஆயுளே நீயடி

கனவில் உலவிச் செல்ல
கண்கள் மூடிக் கிடந்தேன்
கண்ணில் முத்தமிட்டு
கனவை நேரில் செய்தாய்

பூக்கள் கிள்ள வந்தாய்
வேரில் நீரைக் கசிந்தேன்
வேரில் நீர் பொழிந்து
பூக்கள் மலரச் செய்தாய்

அன்பே என்னை நீங்காதிரு
இரவே இன்னும் ஓயாதிரு

உறக்கம் தொலைத்தோம்
உயிரில் கலந்தோம்
தேனோடு தீயைத் தீண்டினோம்

நெருக்கம் அதிகரிக்க
காற்றும்  மூச்சுத் திணற
காதல் அதிகரிக்க
காமம் மூச்சுத் திணற

வியர்வை வழிய உந்தன்
விரல்கள் உறிஞ்சுகிறதே
விரல்கள் ஊற இன்னும்
வேகம் கூடுகிறதே

அழகே உன்னால் நான் வாழ்கிறேன்
அசலே உன்னால் நான் சாகிறேன்

உயிரைத் தரவா?
உடலாய் வரவா?
ஒன்றோடு ஒன்று சேரவா.

Tuesday, July 13, 2010

66.என்னாளுமே உன்னோடு

என் கவிதையின் வார்த்தைக்குள்
வசிப்பவன் நீயல்லவா
என் வார்த்தையின் பொருளை
ரசிப்பவன் நீயல்லவா

உன் ரசனைகள் அனைத்திற்கும்
ரசிகை நானல்லவா
உன் ராகங்கள் பிறக்கையில்
மலருது பூவல்லவா

நினைவோடு இதம் சேர்த்து
நிறைத்தாயே இதம் கோர்த்து
வாழ வா

கொண்டாடுதே கொண்டாடுதே
உன் ஜீவனும் என் ஜீவனும்
திண்டாடுதே திண்டாடுதே
உன் ஆண்மையும் என் பெண்மையும்

செல்ல செல்ல புது வழியுண்டு
அதைக் கண்டு பிடிப்பாய்
மெல்ல மெல்ல என் நாணத்தை
கூண்டில் சிறை வைப்பாய்

உன் விரல் ஊறும் தேகத்தில்
என் உயிரும் உருகும் மோகத்தில்

என் காதலே என் காதலே
என் பெண்மைக்குள் ஏதோ செய்தாய்
என்னாளுமே உன்னோடுதான்
உன் ஆண்மைக்குள் என் ராகம் தான்

சின்ன சின்ன உன் முத்தத்தாலே
என் கன்னங்கள் சிவக்கும்
கண்கள் மூடி நான் சரிகையில்
உன் கைகளும் தாங்கும்

ஏழு ஜென்மம் உன்னுடன் வாழவே
உயில் எழுதி இன்றே தருகிறேன்

65.புன்னகை மொழி

ஏனென்று நானே என்னைக் கேட்டேன்
பதிலே தெரியவில்லை
தேனென்று தானே உன்னைத் தொட்டேன்
விலகிட வழியுமில்லை

வானுக்கு எந்தன் வண்ணம் தருவேன்
கவிதை வரியாலே
பூவுக்கு எந்தன் வாசம் தருவேன்
புன்னகை மொழியாலே

நான் இப்படி மாறிப் போவேன்
என கனவில் கூட நினைத்திலேன்
ஏன் மரத்தடி நிழலாய் மாறினேன்
என் இப்போதும் நான் அறிந்திலேன்

காதலென்றால் சாபம் என்று
யார் தந்தது வரமாய் இன்று
எண்ணிப் பார்த்தால் எனக்குள் ஒன்று
எந்தன் பேச்சை மறுத்தே சென்று

போடுது போடுது ஆட்டம்
எல்லாம் காதல் செய்த மாற்றம்
தேடுது தேடுது நெஞ்சம்
நீயேன் எனக்கு செய்தாய் வஞ்சம்

64.துளியாய் விழு

கனவெல்லாம் நீயாய் மாறி
கொன்றாய் என்னை
நினவெல்லாம் நீயாய் மாறி
தின்றாய் என்னை

வாவென்று சொல்லிய போது
மறுக்காமல் வந்தாயே
தாவென்று சொல்லிய பின்னும்
தயங்கித்தான் நின்றாயே

ஒரு வார்த்தையில் என்னுயிரில்
தீயை வைக்கிறாய்
ஒரு பார்வையில் எனக்குள்ளே
துளியாய் விழுகிறாய்

நட்பிங்கே காதலாய் மாறும்
கதைகள் கேட்டோமோ
காதலிங்கே நட்பாய் மாறும்
விசித்திரம் சொன்னாயே

நட்பென்றால் நிறைவேறாத
காதல் என்பதுதான்
காதலென்றால் வாழ்க்கை முழுதும்
தொடரும் நட்பேதான்

இரண்டுமே இங்கு வேண்டுமே
இதயமே பொங்கி அரற்றுமே
என்ன சொல்லியும் சிறு குழந்தையாய்
நான் புரண்டே அழுதேன்..

இதுவரைக்கும் பேசிய வார்த்தைகள்
இதயத்தில் சேமித்தேன்
இனிமேல் நீ பேசும் வார்த்கைள்
எங்கே சேகரிப்பேன்?

இதயமே இல்லா உனக்காய்
கண்ணீர் சிந்துகிறேன்
இரண்டிதயம் படைத்திருந்தால்
ஒன்றை உனக்கே தந்திருப்பேன்

இரு இதயத்தால் வந்த தொல்லையா?
உன் இதயத்தில் காதல் இல்லையா?

நான் துடிப்பதும்
பின்பு வெடிப்பதும்
இங்கு உன்னால் தானே

Friday, July 9, 2010

63.ஆயுள் வரை


அழகே அறிவே அன்பே அகிலே
என்னைத் துளைத்துப் போனாயடா..
மழையே பிறையே நதியே கடலே
என்னை நனைக்க வந்தாயடா..

ஏனோ உன் மௌனம் மட்டும்
கரையை அரிக்குதடா
மனம் நுரையாய் பறக்குதடா

ஏதோ ஒரு ஈர்ப்பில் எந்தன்
உயிரும் திரிகிறதே
நினைவும் சரிகிறதே
இன்னும் என் செய்வாய்?

அலையும் இழுத்துச் சென்றதன் பின்னே
மூழ்கி முத்தெனெ எடுப்பாயா?
வலையும் இல்லை மூடியும் இல்லை
காற்றைத் தடுப்பாயா?

உனக்குள்ளே வசீகரம் ஏதோ இருக்கு
எனக்குள்ளே அது வந்து செய்யும் கிறுக்கு
வெண்ணிலவின் ஒளியில் புன்னகை செய்து
வெடுக்கென நெஞ்சில் கலகம் செய்து
பார்த்துக் கொண்டே இருக்கும் போதே
பார்வை பறித்தாயே
வேர்த்து நானும் கிடக்கும் போது
தாகம் தீர்த்தாயே
எதைத் தருவேன்? எதைத் தருவேன்?
உனக்கென பரிசாய் எதைத் தருவேன்?
என்னைத் தருவேன் என்னைத் தருவேன்
ஆயுள் வரை எந்தன் அன்பைத் தருவேன்..

62.வாழ்வே நீ

உன்னைக் கண்டாலே என் நெஞ்சம் திண்டாடுதே
சொந்தம் கொண்டாட என் ஜீவன் மன்றாடுதே
மழை வரும் போதெல்லாம் நீ வர வேண்டுமே
என் கெஞ்சும் என் கெஞ்சல் 

உனை பதம் பார்க்குமே
தினம் இதம் சேர்க்குமே

என் கூந்தல் வாசம் உன் மீசை தீண்ட
நாட்கள் மாதம் வருடம் என் நீள்கின்றதே
நான் கொண்ட நேசம் என் ஆயுள் தீண்டி
உந்தன் ஜீவன் தாங்கி தானும் உலகாளுமே
கண்ணே நானிருந்தேன் கானல் நீராக
அன்பே நீ வந்தாய் என்னுள் வேராக
வாழும் நொடி தோறும் 

நானுந்தன் நிழலாகவே
வந்தேன் நிஜமாகவே

உன்னோடு நானும் என்னோடு நீயும்
கைகள் கோர்க்கும் நாளில் எந்தன் காயம் ஆறும்
இரவாக வந்து நிலவாக நின்று
ஒட்டிக் கொண்டு நின்றால் எந்தன் தாகம் தீரும்
அன்பே நீ அறிவாய் என் வாழ்வே நீயென்று
அதனால் தேவையில்லை தனியே ஒளியென்று

நீ முகம் சோர்ந்தால் 

என் நெஞ்சம் தாங்காதடா
நேசம் தீராதடா.

Thursday, July 8, 2010

61.என் ஆசை

நீ காதல் சொன்னால்
என் ஆயுள் கூடி விடும்
நீ மௌனம் சொன்னால்
எனை மரணம் தேடி வரும்
உன் பார்வை பட்டால்
எனை நாணம் மூடி விடும்
உன் கைகள் தொட்டால்
என் உயிரில் பூ வெடிக்கும்

உன் அருகில் நடந்தால்
என் நிழலுக்கும் உயிர் பிறக்கும்
உன் வார்த்தை தந்தால்
என் நினைவில் மழை பிறக்கும்
நீ கவிதை சொன்னால்
என் நேரம் தவமிருக்கும்
நீ சிரித்து கொண்டால்
என் காயம் மறைந்திருக்கும்

என் இரவு தோறும்
உன் உறவில் பலமாகும்
என் கனவு தோறும்
உன் வருகையில் அழகாகும்
என் விடியல் தோறும்
உன் மடியில் உருவாகும்
என் விழிகள் தோறும்
உன் முத்தத்தில் ஒளியாகும்

உன் இமைகள் தவித்தால்
என்ன் இதயம் தவிடாகும்
உன் இளமை பசித்தால்
என் இளமை உணவாகும்
உன் ஆசை எல்லாம்
என் ஆசை என்றாகும்
உன் தேவை எல்லாம்
என் தேவை எனமாறும்

Friday, July 2, 2010

60.என் வானம் உனக்காக

என் இரவுகள் உறக்கம் தொலைத்ததடா 
உனக்கேன் புரியவில்லை..
உன் பிம்பம் நெஞ்சில் நிலைத்ததடா 
மீண்டெழ வழியுமில்லை.. 

என் கனவுகள் உன்னை அழைக்குதடா 
நீயதை அறிவாயா? 
என் கவிதைகள் உன்னால் பிழைக்குதடா 
உனக்கது தெரியாதா?

என் மனம் உன்னைத்தான் 
சுற்றியே வருதே தினமே..
உன் குணம் என்னைத்தான் 
மயக்கியே செல்லுதே கணமே..

உன் வனம் எனக்காகும் 
நாளையே எண்ணி சிலிர்ப்பேன்..
என் வானம் உனக்காக 
இருக்குதே வந்தால் துளிர்ப்பேன்..

ஒவ்வொரு நாளிலும் உன் பெயர் எழுதுவேன் 
ஒவ்வொரு முறையுமே புது கவிதைகள் தந்து செல்லுதே... 
ஒவ்வொரு வேரிலும் உனக்கென பூக்கிறேன்..
ஒவ்வொரு பூவுமே உன் வாசம் தந்து கொல்லுதே.. 

உன் குரல்  கேட்காமல் 
உறங்குமா எந்தன் நெஞ்சம்..
உன் விரல் தீண்டாமல் 
புலம்புதே எந்தன் மஞ்சம்..

உன் விழி பார்க்கையில் 
உயிருக்குள் எழுமொரு அலையே 
உன்னை நான் நினைக்கையில் 
நனைக்கவே வருதே மழையே 

உன்னிடம் என்னவோ எனக்குதான் பிடிக்குதே 
உண்மை நான் சொல்கிறேன் இதற்கும் நீ சிரிப்பாய்? 
உன்னையே கேட்டுத்தான் இதயமும் துடிக்குதே 
உள்ளதை சொல்கிறேன் இப்போதும் புன்சிரிப்பா? 

Wednesday, June 30, 2010

59.மனசெல்லாம் நீதானே..

தீராதே காதல் தீராதே 
என் ஆயுள் உள்ளவரை தீராதே 
மாறாதே காதல் மாறாதே 
நான் சாகும் நிலைவரை மாறாதே 

உனக்கெனத் தானே உயிர் வளர்த்தேன்
உனக்கது தெரியாதா?
உனக்கென நானும் யாதும் செய்வேன்..
உனக்கது புரியாதா?

தீயில் நீயும் படுக்கச் சொன்னால் 
நொடியில் சாம்பல் துகளாவேன்..
கடலில் நீயும் குதிக்கச் சொன்னால் 
கணத்தில் கரையில் ஒதுங்கிடுவேன்..

எதையும் உனக்கென இழப்பேனே 
உன்னை மட்டும் முடியாதே.. 
எதையும் மறந்து தொலைப்பேனே 
உன்னை மட்டும் முடியாதே.. 

கண்ணுக்குள்ளே தானே விதையாகி 
நெஞ்சுக்குள்ளே வேரானாய்..
மண்ணுக்குள்ள போற காலமட்டும் 
மனசெல்லாம் நீதானே.. 

கனவில் வந்து கைது செய்து
நினைவின் சிறையில் நீய்டைத்தாய் 
உணர்வில் உயிரில் கலந்து விட்டு 
உடலில் மட்டும் தனித்திருந்தாய் 

நெஞ்சே நீயும் மறுக்காதே 
தஞ்சம் நீ மறவாதே 
நினைவே நீயும் வெறுக்காதே 
உயிரும் பிழைக்காதே 

உன்னை விட்டு விலகி வரும் வெற்றி 
தோல்விக்கு சமம்தானே 
உன்னோடு சேர்ந்து வரும் தோல்வி 
வெற்றிக்கு மேல்தானே.. 

Monday, June 28, 2010

58.உறவாடு எந்தன் ஜீவனே


அலையாடும் கண்கள் இமை சேருதே
விளையாடும் கைகள் இதம் சேர்க்குதே
கொடிப்பூக்கள் வந்து மடி சேருதே
என்னோடு நீயும் சேரடா..


இரவாக வந்து நீ தீண்டினாய்
உறவாக வந்து நீ தாங்கினாய்
கரையாத இரவில் பிரியாமலே
உறவாடு எந்தன் ஜீவனே


வேராக வந்து பூ தூவினாய்
நேராக வந்து வலி நீவினாய்
போதாது அன்பே போதாதடா
ஜென்மம் ஏழுமே தீராதடா


நட்பாக வந்தாய் நடை பழகினேன்
விழியாக வந்தாய் வழி காண்கிறேன்
உயிராக வந்தாய் இணை சேர்கிறேன்
பிரியாதே என்னை இனியுமே

57.என்ன செய்ய நான்?


உனக்குள்ளே என்னை வைத்துத் தைத்திடவா?
செடிக்குள்ளே பூவொன்றை மறைத்திடவா..
வெடித்தெழும் வாசனைதான் சொல்லிவிடுமே
என்ன செய்ய நான்?


எனக்குள்ளே உந்தன் எண்ணம் வதைக்கிறதே
இரவினில் கனவெல்லாம் நிறைக்கிறதே
இதயத்தில் வலி ஒன்று பிறக்கிறதே
என்ன செய்ய நான்?


பார்வை பட்ட நொடியிலிருந்தே
பற்றி எரிகிறேன்
புன்னகையின் ஒலியில் தானே 
புதைந்தே போகிறேன்


கைகள் கோர்த்து சென்ற கணத்தை 
பதிவு செய்கிறேன்
கால்கள் செல்லும் பாதையெங்கும் 
உன்னைப் பார்க்கிறேன்


மீதமுள்ள காலம் உன்னில்
வாழத் துடிக்கிறேன்
யாவுமுள்ள உறவாய் உன்னை
எண்ணிக் கொள்கிறேன்


வேறெதுவும் தேவை இல்லை
காதல் போதுமே
இம்மென்று சொன்னால் எந்தன் 
கைகள் நீளுமே


ஏனோ என் மனமிங்கு தவிப்பது ஏனோ?
எனை உணர்வுகள் கொல்வது ஏனோ?
இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல வாராயோ..


நீயா என் இரவுகள் திருடிய தீயா?
என் இமைகளில் வந்தது நீயா?
என் இதயத்தில் உறைந்திட வந்தாயா?


கவிதைகள் ஆயிரம் தந்து செல்கிறாய்..
படித்திட நீயேன் வருவதில்லை
கனவாய் நானும் மறையுமுன்னே
காதலையேந்தி வாராய்..


பாராய் என் அவஸ்தைகள் நேரில் பாராய்
என் அத்தனை செயலுக்கும் வேராய்
ஒரு வார்த்தை நீதான் தந்தாயே..


காதல் எனை சுழலச் செய்வது காதல்
நான் சுவாசித்திருப்பது காதல் 
என் காதல் முழுதும் உனக்கே சொந்தமடா..


ஒருமுறைதான் இந்த வாழ்க்கையே & உன் 
ஒருவனைத்தான் வேண்டி நிற்குதே
மௌனம் விட்டு சம்மதம் 
சொன்னால் உயிர்ப்பேன்

Sunday, June 27, 2010

56.காற்றைக் கைது செய்




பொடியனே தெரியுமா?  - என் 
புதையல் நீதானடா
விடியலே தெரியுமா?  - என் 
விழியும் நீதானடா


உந்தன் பேரைத்தான் கேட்டால் போதும்
உயிரில் பூப்பூக்குதே
உந்தன் பார்வைதான் பட்டால் போதும் 
இரவில் ஒளி தாக்குதே
இசையும் கேட்கின்றதே


இரக்கம் சிறிதுமின்றி என்
உறக்கம் பறித்துப் போனாய்
காற்றைக் கைது செய்து என்
வாசம் திருடிப் போனாய்


உன்னைக் காணாமல் என் மனமிங்கு 
தூண்டில் புழுவானதே
வார்த்தை சொல்லாத போதும் உந்தன் 
பார்வை வலுவானதே
காதல் நிலையானதே


எனக்குள் நீயும் வசிக்க
என் உயிரில் கூடு செய்வேன்
எனக்குள் இருக்கும் காதல் 
மடை மாற்றி உன்னில் தைப்பேன்..


சிரித்து சிரித்தேதான் எந்தன் 
கவனம் ஈர்த்து சிலையாக்கினாய்
மறுத்து மறுத்தேதான் என்னை 
உன்னில் கரைத்து நுரையாக்கினாய்
நானும் நீயாகினாய்..

55.கவிதை கனவு



நட்புக்குள்ளே காதல் பூவை யார் வைத்தது?
நெஞ்சுக்குள்ளே தீயை வைத்து யார் தைத்தது?
எட்டி எட்டி போகும் மனதை நீயறிகிறாய்
தட்டி தட்டி மீண்டும் என்னில் போர் தொடுக்கிறாய்..

இரவு நேர விண்மீன் பெண்ணாய்
என்னை மாற்றினாய்..
இதயம் வேண்டி நின்ற போதும் 
சிரித்து மழுப்பினாய்..
இது வழியா? இதய வலியா?

என்ன சொல்ல? என்னைக் கொல்ல
உந்தன் ஒற்றை வார்த்தை போதுமே..

உறங்கும் போது உந்தன் குரலில் 
என்னை மறக்கிறேன்
விழிக்கும் போது என்னை மறந்து
உன்னை நினைக்கிறேன்..

காயம் நூறு கண்ட போதும் 
தாங்கிக் கொள்கிறேன்.. 
உன் ஒற்றை வார்த்தை தாங்காமல்தான் 
பொங்கி அழுகிறேன்.. 

கவிதை கனவு கண்கள் வழியே 
நிறைந்து வழிகிறாய்.. 
நெஞ்சுக்குள்ளே ஓவியமாய் 
நின்று சிரிக்கிறாய்.. 

வானம் என்ன பூமி என்ன 
மாறிப் போகலாம்..
நீ சொன்ன வார்த்தை மட்டும் 
என்றும் மாறிப் போகுமா? 

கடலும் என்ன அலையும் என்ன 
வற்றிப் போகலாம்.
எந்த காயம் கூட 
காலப்போக்கில் ஆறிப் போகலாம்..

எந்த உறவும் வேண்டாமென்று 
தனித்து வந்தவள் 
உன் காதல் மட்டும் போதுமென்று 
வாழ்ந்து வருபவள்.. 

போதும் போதும் உந்தன் மௌனம்
என்னை அரிக்குதே..
வேண்டும் வேண்டும் என்று உள்ளம்
உன்னைத் துரத்துதே..

என்னை விடவும் உன்னை அதிகம்
காதல் செய்கிறேன்..
உன் புன்னகைக்கு எந்தன் வாழ்வை
ஈடு தருகிறேன்.. 

54.அன்பும் அக்கறையும்


காதல் சொல்வாய்
காயம் கொள்வாய்
காதல் செய்வாய்
காலம் வெல்வாய்

ஒருவரையொருவர் நேசிக்கும் 
அன்புக்கு விலையே இல்லையடா..
அன்பைத் தவிர உலகில்
எதுவும் நிலையே இல்லையடா..

நோயைப் போக்கும் மாயம் உள்ளது
அன்பும் அக்கறையும்
தீயக் கூட குளிரச் செய்து 
போக்கும் எக்கறையும்.

53.ஒரு ஒற்றைக் கேள்வி


உனக்கும் ஒருநாள் காதல் வரலாம் 
அப்போதென் போல் காயம் படலாம்
என் உயிரில் கலந்த நினைவுகள் எல்லாம்
உன் உறக்கம் பறித்து வேதனை தரலாம்

ஒரு ஒற்றைக் கேள்வியால் எனை மீட்டாய்
அதே ஒற்றைக் கேள்வியால் தீயிலிட்டாய்
அந்த கேள்விகளெல்லாம் உன்னை உலுக்கி
கேள்விகள் கேட்கும் நாள் வரலாம்

காதல் செய்த குற்றம் தவிர
வேறு என்ன செய்தேன்?
காதல் மட்டும் வேண்டாமென்றால் 
நானும் எங்கு செல்வேன்?

அந்த காதல் உன்னைக் கைது செய்யும்
விடுதலை கிடையாது
அமுத காதல் விஷமாய் மாறும் 
பிழைக்க வழியேது?

ஒருநாள் நீ உணரலாம் 
அதுவரை நானும் 
இருந்தால் பார்க்கலாம்
காதலும் வாழும்

உன் விழி பார்க்கையில் 
என் உயிர் போகனும் 
என் விழி மூடினால் 
உன் கை தாங்கணும்
உனக்குள்ளே நானிருக்கேன் 
வந்து விடு தந்து விடு.

52.அழகே வா


ஒரு பார்வை தந்தாய் 
என் விழி பூத்தது
ஒரு வார்த்தை சொன்னாய்
என் உயிர் வேர்த்தது

இதழ் சேர்க்காமல் எனக்குள்ளே
அனல் மூட்டினாய்
கைகோர்க்காமல் நரம்பெல்லாம்
முறுக்கேற்றினாய்..

அழகே வா என் ஆசை தீர்க்க 
அழகே வா என் ஓசை நீர்க்க

நீ பேசாத நாட்களில் 
என் நாட்குறிப்பேது கண்ணா
நீ தீண்டாத நாட்களில்
என் பூ உதிராதோ கண்ணா

உன் சுவாசம் இடம்மாற 
என்னில் புது வாசம் பிறக்கின்றதே
நம் நேசம் மாறாது 
என்றும் என்ற கானம் இசைக்கின்றதே

51.கனவே நீ


என் கண்ணைப் பார்த்துச் சொல்லு
என் கண்ணா
என் மேல் காதல் இல்லையே?
இரவுதான் காத்துக் கிடக்கு 
இதயம்தான் வேர்த்துக் கிடக்கு

முதல் முறை நாம் சந்திக்கையில் 
முன் ஜென்ம பந்தம் கண்டேன்
மறுமுறை நாம் சந்திக்கையில் 
காதலுக்கே சொந்தம் கொண்டோம்

உன்னெஞ்சில் எனக்கென்று 
இடமுண்டு நானறிவேன்
என் ஆயுள் தீருமுன்னே
உன் வாயால் சொல்ல வைப்பேன்
விடியாத இரவு இல்லை
படியாத உறவு இல்லை
இது பொய்யில்லை 
நீயதை உணர வைப்பேன்.. 

என்னெஞ்சில் அடைகாத்த
காதலிங்கே ஜெயித்திடனும்
கிளைதாவும் குரங்குமனம்
ஊர்க்கதையும் பொய்த்திடனும்

உன்னோடு வாழ்ந்திருந்தால்
மரணமிங்கே வாராது
உயிரே நீ விலகாதே
என்தேடல் தீராது
கனவே நீ கலையாமல்
நினைவே நீ தேயாமல் 
என் வாழ்க்கைக்கு நீயொரு 
அர்த்தம் சொல்லு..

50.முயற்சிகள் தோற்பதில்லை



மாற்றம் இது மாற்றம்
நெஞ்சில் அனல் மூட்டும் மூட்டும்
தேற்றும் மனம் தேற்றும்
உன்னில் காதல் பூக்கும் பூக்கும்

தடைகளும் தீர்ந்து
தயக்கமும் நீங்கும் நீங்கும்
வார்த்தைகள் சேர்ந்து 
வாழ்க்கையாய் மாறும் மாறும்

முயன்றால் முடியும் 
முயற்சிகள் தோற்பதில்லை
உன்னிலே உறைந்தேன்
உன்னிலே உயிர்த்தேன்
உன்னிலே கரைந்தேன்
உன்னையே கரைத்தேன்
உன்னிலே நிறைந்தேன்
உன்னையே நிறைத்தேன்

Friday, June 4, 2010

49.தீராது நம் காதல்




இரவிலே என் இரவிலே 
இயங்கினாய் நீயடா.. 
இதயமே ஆனாய் உணரடா 

உறவிலே உன் உறவிலே 
மயங்கினேன் நானடா..
மனமெல்லாம் தேனாய் நீயடா  

காணாமல் போனேனே 
என் கண்ணின் எதிரிலே - ஏதும் செய்ய 
தோணாமல் உறைந்தேனே 
உன் நினைவின் சிறையிலே 

கைப்பிடித்து தூக்கி விட்டாய் 
கடற்கரையில் - இன்று 
கைப்பிடிக்க தயங்குகிறாய்
உயிர்தரையில் ..

இந்த கண்ணீரெல்லாம் மிக வலியானது 
இதயத்தை கிழிக்கின்றது  
அட நீ தொட்டதால் அந்த இதயம் கூட 
வலியோடு சிரிக்கின்றது.. 

வேண்டாமே துயரங்கள் 
நம் அன்பின் பாதையில் 
தீண்டாயோ விழி பார்த்து 
நான் மீள்வேன் வேகத்தில்

உனக்கெனவே  உயிர்  கொண்டேன்  
என நினைத்திருந்தேன்  
உன்னை  நினைக்கையிலே  
உயிர்  முழுதும் தேன்  கொண்டேன் 

உன்  பிடிவாதத்தில்  நம்  நேசத்தினை 
பலியாக்கக்  கூடாதடா .. 
கரை  கண்ட  பின்  மீண்டும்  கடலுக்குள்ளே  
எனை  வீசி  போகாதடா .. 

ஏன்  இந்த  பிரிவென்று  
மனம்  கேட்கும்  போதிலே   
இதுவும்  ஒரு  நிலையென்று  
சொல்லும்  காதலே   

என எடை தாங்கி உன் தோள்
தந்தாய் நான் கீழிறங்க.. 
என மனமறிந்தும் ஒரு சொல் 
சொன்னாய் மீளா விழியுறங்க .. 

இந்த காதல் என்ன ஒரு கவிதை போலா 
ரசித்ததும் ஓரங்கட்ட 
இந்த காதல் முழு வாழ்க்கைதானே 
நீயின்றி எங்கே செல்ல 

தீராது நம் காதல் 
இந்த ஜென்மம் முடியலாம் 
சோராது என் மனமும் 
உன்னைச் சேரும் வரையிலும்.. 



Wednesday, March 3, 2010

48.மௌனமே ஏனடா?


பூங்காற்றாய் தீண்டிப் போனாயே
புதுக்கனவாய் மாறிப் போனாயே
ஜன்னல் வந்து நின்றாய் 
என் பேர் கேட்டுச் சென்றாய்
ஒருநாள் மாலை வந்தாய்
காதல் கவிதை தந்தாய்


வா வா மறுமுறை வா
வானம் தூவும் மழைப்பூவா 
தா தா பார்வை தா 
கனவில் தந்ததை நேரில் தா
உயிரில் உயிரை அழகாய் நிறைத்தாய்


அடங்கவா உனக்குள்ளே அடங்கவா
கனவிலே தொடங்கவா
சிரிக்கிறேன் எனக்குள்ளே சிலிர்க்கிறேன்
இடைவெளி நமக்குள்ளே இருக்குதே
இதயத்தை நொறுக்குதே 
அழிக்கவா அணைப்பினை அளிக்கவா 


கைகள் நீள ஏனோ இந்த கண்கள் தாள
ஏதோ ஒன்றை சொல்ல வந்து 
மறந்தே போகின்றேன் 
தாகம் கொண்ட நெஞ்சுக்குள்ளே வேகம் துள்ள 
வெட்கம் என்னை நெட்டித் தள்ள 
துவண்டே போகின்றேன்
நனவோ கனவோ சம்மதம் சொல்வேன்


தேன் தேன் உனை நினைத்தேன்
என் ஜீவன் கொண்டு உனை நிறைத்தேன்
ஏன் ஏன் தடையும் ஏன்?
பூவைத் தாங்கும் தயக்கம் ஏன்?


மறைக்கிறேன் உனைக்கண்டால் மறைகிறேன்
உனக்குள்ளே ஒளிகிறேன்
உருகினேன் சொல்லவே மருகினேன்
அனுப்பவா தூதொன்று அனுப்பவா
பறவைகள் போதுமா?
சொல்லடா மௌனமே ஏனடா?


கத்தியின்றி ஒரு துளி ரத்தமின்றி
எங்கும் சிறு சத்தமின்றி
யுத்தம் நடக்குதடா
தூக்கமில்லை எதிலும் நோக்கமில்லை
பயணத்தில் வேகமில்லை
எதுவோ கணக்குதடா
அடியோ அணைப்போ இரண்டும் சம்மதம்


பார் பார் என்னைப் பார் 
கண்ணில் ஏக்கம் வழிகிறதா?
சொல் சொல் ஒளிவின்றி சொல் 
உனக்கும் தாக்கம் இருக்கிறதா?

Thursday, February 25, 2010

47.என்னுள் நீ வெளிச்சமாய்.


நீதானே அழைத்தது 
நீராக நனைத்தது 
நாள்தோறும் உன்னை 
நினைத்து வேர்த்தேனே 
உயிரினை முழுதுமாய் வார்த்தேனே 

என்ன சொல்லுவாய் என்றே 
நான் ஏங்கினேன்
என்ன செய்யுவேன் உன் 
ஜீவன் தாங்கினேன்.

யாராரோ எனை பார்த்து 
அவர் நேசம் சொல்ல 
நானோ உன் விழி பார்த்து 
என் நேசம் சொல்ல 

துடிக்கும் மனமே வாராய் 
துணிந்து காதல் கூறாய்
ஏனடா யோசனை? 
இன்னும் தாமதம் என் மனம் தவித்திடும். 

எது நல்லது என்பதும் அறிந்திலேன்
எது கேட்டது அதையும் புரிந்திலேன்

ஏதோ என் வழி பார்த்து 
நான் போகும் போது 
நீதானே வரவேற்று 
நிழல் சேர்த்தாய் நூறு 

இதமான வார்த்தை தந்தாய் 
இதயத்தில் வேராய் ஆனாய் 
காலம்கை கூடட்டும் 
எட்டி பார்க்கிறேன் 
என்னுள் நீ வெளிச்சமாய்.. 

Wednesday, February 24, 2010

46.சில் சில்


மழையாகத் தூறிச் சென்றாயே
அலையாக வாரிக் கொண்டாயே

காலை மாலை எல்லை
கண்ணா நமக்கு இல்லை
இரவு ஒன்றே போதும்
இதமாய் பேசிட தோன்றும்

சில் சில் என அழைப்பாய்
சட்டென மலர்வேன் ஒரு பூவாய்
நில் நில் என உரைப்பாய்
ஓடி மறைவேன் சிறு காற்றாய்
குரலால் என்னை மயக்கிப் போனாய்..

வருகிறாய் இரவினில் வருகிறாய்
இமைகளைத் தொடுகிறாய்
இருளிலே கரைகிறேன் உறைகிறேன்..
விடிகையில் விரல் தொட்டுப் பார்க்கிறாய்
விருப்பங்கள் சொல்கிறாய்
விரும்பியே தருகிறேன் நிறைகிறேன்

சின்ன தொடுதல் போதுமடா
சிதறிப் போவேன்
ஒற்றை வார்த்தை போதுமடா
பதறிப் போவேனே
எந்தன் கோபம் உந்தன் முன்னால்
நுரையைப் போகும்..
உந்தன் முகம் கண்டால் போதும்
துயரம் மறப்பேனே..
உனையே எனக்கு பிடிக்கும் காரணம்

சொல் சொல் சொல்லிடவா
பொழுதுகள் ஆயிரம் போதாதே
வா வா எழுதிடவா
பக்கங்கள் லட்சம் போதாதே
எனையே திருடி எதிரினில் சென்றாய்

அளக்கிறாய் கண்கொண்டு பிளக்கிறாய்
எனக்குள்ளே சிதறினேன்
உயிர்வரை இனிக்கிறேன் இணைகிறேன்
சிரிக்கிறாய் கவலைகள் மறக்கிறேன்
நிழலாகத் தொடரவே
விரும்பினேன் சொல்லவே தயங்கினேன்

உன்னைப் போல என்னை யாரும்
வென்றதில்லை
நானும் கூட தோற்றதில்லை
இதுதான் காதலடா
கொஞ்சி கொஞ்சி பேசும் போது
குழந்தையாவேன்
கோபத்திலே திட்டிச் செல்வேன்
அதிலில்லை மோதலடா
இனி நான் உன்னை விலகிட மாட்டேன்

சில் சில் உன் மனசில்
உலவித் திரிவேன் யார் தடுப்பார்?
சொல் சொல் ஒருமுறை சொல்
உயிரின் உணர்வை யாரறிவார்?
இனி நம் வாழ்வில் வசந்தங்கள் கூடும்..