Wednesday, July 14, 2010

68.மறவேன் உந்தன் காதலினை


உன்னோடு வாழ்ந்திடவே தான்
உயிரை இன்னும் வைத்திருக்கேன் நான்
மண்ணோடு போகும் போதும் 
மறவேன் உந்தன் காதலினை

கண்ணோடு மோதியதாலே
காதல் வலிதான் கொண்டேன் அன்பே
என்னோடு நீ வரும் போது 
எல்லா வலியும் பறந்திடுமே

தினந்தோறும் என் இரவை 
உன் வரவில் நிறைத்திருக்கும் 
வரம் கூட வேண்டாம் கண்ணே
சாபம் தந்திட வா

நூறு கோடி ஆண்கள் உண்டு
உன்னைப் போல் யாருமில்லை
உந்தன் அணுகுமுறையாலே
கொள்ளை போனேனே

வேறெதுவும் தேவை இல்லை
சிறுபார்வை போதுமடா
அதுவேதான் சம்மதமாய்
எண்ணி வாழுவேன்

யாராரோ கடந்தார் அன்பே
நீதானே கடத்தினாய் என்னை
யாராரோ உடலைப் பார்க்க
நீதானே உள்ளம் பார்த்தாய்

கற்பனைகள் ஏதுமின்றி
கனவுகளின் தூதுமின்றி 
சிறகடித்த என்னை நீ
கிறங்கடித்தாயே..

கவிதைகள் ஆயிரமாய்
காதலது பாயிரமாய்
படைத்திடவே செய்தாயே
படைப்பாளனே

ஒரு நாள் நான் பேசா விடினும்
உயிரிங்கே உறையுது அன்பே
உருகாத எந்தன் மனதும்
மருகித்தான் கிடக்குது உன்னில்

No comments:

Post a Comment