Monday, February 15, 2010

41.கண்டு பிடிக்க வா


உன்னைக் கண்ட நொடியில்
நான் பிறந்தேன்
என்னை அங்கே மடித்துக்
கொடுத்து வந்தேன்
அந்த நாளும் எந்தன் நெஞ்சை
அகன்று போகுமா?
எந்த நாளும் உந்தன் நிழலை
தொடர வேண்டும் நான்.

அழைக்கிறேன் வருகிறாய் இரவினிலே
அணைக்கிறேன் மறைகிறாய் கனவினிலே
உயிரைத் திருடி உயிரில் மறைத்தவனே
உணர்வைத் திரட்டி உணர்வில் நிறைத்தவனே

அழுகிறேன் வழிகிறாய் துளித்துளியாய்
சிரிக்கிறேன் மலர்கிறாய் இதழிதழாய்
மண்ணைச் சேர மழைக்குத் தடையில்லை
என்னைச் சேர உனக்கும் தடையில்லை

விடியலாய் வருகிறாய் விழித்துக் கொள்வேன்
மடியிலே ஏந்தினால் பிழைத்துக் கொள்வேன்
ஒளியைப் போல என் வாழ்வில் வந்தவனே
அழகின் மொத்தம் அள்ளித் தந்தவனே

மௌனம் கலைக்கும் மொழியாய் வருவாயா?
மகிழ்வாய் பூக்கும் கவிதை தருவாயா?
ஓடி ஓடி ஓடி நானும் ஒளிந்து கொள்ள வா
தேடித் தேடி தேடி நீயும் கண்டு பிடிக்க வா

No comments:

Post a Comment